பாட்னா: அண்மையில் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி, ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கைகோர்த்து புதிய ஆட்சியமைத்த பிகார் முதல்வர் நிதீஷ் குமார், தனக்கு பிரதமர் பதவி மீதெல்லாம் ஆசையில்லை, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை மட்டுமே செய்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பிருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, எனது கூப்பிய கரங்களுடன் இதைச் சொல்கிறேன். எனக்கு அதுபோன்ற எந்த எண்ணமும் இல்லை.. அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கம். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து வீறுநடை போட வேண்டும் என்பதற்காகவே மட்டுமே முயற்சித்து வருகிறேன். அவ்வாறு நடந்தால் அது மிகவும் நன்றாக இருக்கும் என்று நிதீஷ் குமார் கூறினார்.
பிகார் முதல்வரான நிதீஷ் குமார் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறி, பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, புதன்கிழமை ஆர்ஜேடி கூட்டணியில் பிகார் மாநிலத்தின் முதல்வராக 8வது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.