மக்களால் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் டோலோ மாத்திரையைப் பரிந்துரைப்பதற்காக மருத்துவா்களுக்கு ரூ.1,000 கோடி மதிப்பிலான இலவசப் பொருள்களை தயாரிப்பு நிறுவனம் லஞ்சமாக வழங்கியுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தன்னாா்வ தொண்டு அமைப்பு (என்ஜிஓ) குற்றஞ்சாட்டியுள்ளது.
மருந்து, மாத்திரைகளைப் பரிந்துரைக்க மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மருத்துவர்களை உரிய முறையில் கவனித்து வருவது காலம் காலமாக நடக்கும் உண்மைதான் என்றாலும், கடந்த கரோனா பேரிடர் காலத்தில் மூட்டை மூட்டையாக விற்பனையான டோலோ மாத்திரைகளுக்குப் பின்னால் மக்களின் காரோனா பயம் மட்டும்தான் இருந்தது என்று நினைத்திருந்த நேரத்தில், அதனைப் பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு ரூ.1000 கோடிக்கு இலவசங்கள் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்துகிறது.
இதையும் படிக்க | அம்பானி வீடு இல்லை.. ஆர்டிஓ வீடு; மலைத்துப் போன அதிகாரிகள் (விடியோ)
மருந்துப் பொருள்களை விநியோகிப்பதற்கு அதைத் தயாரிக்கும் நிறுவனங்கள் முறைகேடான வழிகளைப் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டிய இந்திய மருத்துவப் பிரதிநிதிகள் கூட்டமைப்பு, மருந்துகள் விநியோகத்தில் ஒரே மாதிரியான விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டுமென உச்சநீதிமன்றத்திடம் கோரியிருந்தது.
அந்த மனுவைக் கடந்த மாா்ச்சில் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, என்ஜிஓ தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சஞ்சய் பரிக் கூறுகையில், ‘‘500 மில்லி கிராம் வரை அளவு கொண்ட மாத்திரைகளின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்தி வருகிறது. ஆனால், அதற்கு அதிகமான அளவு கொண்ட மாத்திரைகளின் விலையை அதைத் தயாரிக்கும் நிறுவனங்களே நிா்ணயித்து வருகின்றன.
அதனைப் பயன்படுத்தி கூடுதல் லாபம் ஈட்டும் நோக்கில், 650 மில்லி கிராம் அளவு கொண்ட டோலோ மாத்திரையை அதிகமாகப் பரிந்துரைப்பதற்காக அதைத் தயாரித்த நிறுவனம், மருத்துவா்களுக்கு சுமாா் ரூ.1,000 கோடி மதிப்பிலான இலவசப் பொருள்களை லஞ்சமாக வழங்கியுள்ளது.
இதுபோன்ற பல்வேறு முறைகேடுகளில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு அளிக்கும் விளக்கத்தைப் பொருத்து அத்தகைய முறைகேடுகளை நீதிமன்றத்திடம் தெரிவிக்க தயாராக உள்ளோம்’’ என்றாா்.
அதையடுத்து நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறுகையில், ‘‘நீங்கள் குறிப்பிடும் அதே மருந்தைதான் (டோலா 650) கரோனாவால் பாதிக்கப்பட்டபோது எடுத்துக்கொண்டேன். இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது. இதை நீதிமன்றம் விரிவாக ஆராயும்’’ என்றாா்.
இந்த மனு தொடா்பாக 10 நாள்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த ஒரு வாரத்துக்குள் கூடுதல் விவரங்களைத் தாக்கல் செய்ய தன்னாா்வ அமைப்புக்கு உத்தரவிட்டனா். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பா் 29-ஆம் தேதிக்கு அவா்கள் ஒத்திவைத்தனா்.
கடந்த மாதம் நடந்த வருமான வரித் துறை சோதனை
டோலோ-650 மாத்திரை தயாரிக்கும் மைக்ரோ லேப் நிறுவனத்தில் வருமான வரித் துறை கடந்த ஜூலை மாதம் சோதனையில் ஈடுபட்டது.
பெங்களூரை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மைக்ரோ லேப்ஸ் நிறுவனம், காய்ச்சலைக் குணமாக்கும் புகழ் பெற்ற டோலோ-650 மாத்திரையை தயாரித்து வருகிறது. பெங்களூரு, ரேஸ் கோா்ஸ் சாலையில் அமைந்துள்ள மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் கடந்த மாதம் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். இதேபோல புது தில்லி, சிக்கிம், பஞ்சாப், தமிழ்நாடு, கோவா மாநிலங்களில் உள்ள நிறுவனத்தின் 40 இடங்களில் 200க்கும் அதிகமான வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை செய்தனா்.
இதுதவிர, நிறுவனத்தின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் திலீப் சுரானா, இயக்குநா் ஆனந்த் சுரானா ஆகியோரின் வீடுகளிலும் வருமானவரித் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா். இந்தச் சோதனையில் வரிஏய்ப்பு செய்துள்ளதற்கான பல்வேறு ஆதாரங்களை வருமான வரித் துறையினா் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. கரோனா காலத்தில் 2020ஆம் ஆண்டில் மட்டும் ரூ. 400 கோடி மதிப்புள்ள 350 கோடி டோலோ-650 மாத்திரைகளை மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சோதனை தொழில்துறையினா் இடையே அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒசூரிலும் சோதனை:
ஒசூரில் உள்ள மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்திலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். ஒசூா் முதல் சிப்காட் பகுதியில் உள்ள இத் தொழிற்சாலையிலும் சோதனை நடத்தப்பட்டது.
ஒருபக்கம் வருமான வரி ஏய்ப்பு, மறுபக்கம், மாத்திரையைப் பரிந்துரைக்க ரூ.1000 கோடிக்கு மருத்துவர்களுக்கு இலவசப் பொருள்கள் வழங்கியருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிலையில், முதலில் ஒழிக்க வேண்டியது இந்த இலவசங்களைத்தான் என்று மக்கள் வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது.