மணீஷ் சிசோடியா மீது இது முதல் ரெய்டு அல்ல என்றும் ரெய்டில் இப்போதும் அவர்களுக்கு எதுவும் கிடைக்காது என்றும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார்.
தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீடு உள்பட சுமார் 20 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
மதுபான உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரில் சிபிஐ இந்த சோதனையை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இதக்குறித்து காணொலியில் பேசியுள்ள தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால்,
'இது முதல் ரெய்டு அல்ல. கடந்த 7 ஆண்டுகளில், மணீஷ் சிசோடியா மீது பல சோதனைகள் நடத்தப்பட்டன. அவர் மீது பல பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. என் மீதும், சத்யேந்தர் ஜெயின் மீதும், கைலாஷ் கெலாட்டிடமும் ரெய்டுகள் நடத்தப்பட்டன. ஆனால், எதுவும் கிடைக்கவில்லை. இப்போதும் அவர்களுக்கு எதுவும் கிடைக்காது.
இன்று மணீஷ் சிசோடியா உலகின் சிறந்த கல்வி அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், சிபிஐ அவரது வீட்டில் சோதனை நடத்தி வருகிறது. எனவே, நிறைய தடைகள் இருக்கும். நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் முதல் பக்கத்தில், தில்லியின் கல்விப் புரட்சியைக் கொண்டுவருவது அவ்வளவு எளிதல்ல.
சிபிஐ தனது வேலையைச் செய்கிறது, அதனால் பயப்படத் தேவையில்லை. சிபிஐயை அதன் வேலையைச் செய்ய அனுமதிக்க வேண்டும், எங்களை தொந்தரவு செய்ய மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது. தடைகள் வரும் ஆனால், வேலை ஒருபோதும் நிற்காது' என்று பேசியுள்ளார்.
இதையும் படிக்க | தில்லி துணை முதல்வர் வீட்டில் சிபிஐ சோதனை