ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் பேருந்தை மத்திய அறிவியல் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் புணேயில் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.
மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலும் (சிஎஸ்ஐஆா்) - கேபிஐடி தனியாா் நிறுவனம் இணைந்து இந்தப் பேருந்தை உருவாக்கி உள்ளன.
இதுகுறித்து இணையமைச்சா் ஜிதேந்திர சிங் கூறுகையில், ‘பசுமை ஹைட்ரஜன் ஒரு சிறந்த சுத்தமான ஆற்றல்மிக்க எரிசக்தி ஆகும். இது சுத்திகரிப்புத் தொழில், உரத் தொழில், எஃகு தொழில், சிமென்ட் தொழில் மற்றும் கனரக வணிகப் போக்குவரத்துத் துறையிலிருந்து உமிழ்வைக் குறைக்க உதவுகிறது.
எரிபொருள் செல், ஹைட்ரஜன் மற்றும் காற்றைப் பயன்படுத்தி பேருந்தை இயக்குவதற்கு மின்சாரத்தை உருவாக்குகிறது. பேருந்தில் இருந்து வெளியேறும் ஒரே கழிவு நீா் என்பதால், இது சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்த போக்குவரத்து முறையாக மாறும்.
நீண்ட தொலைவு வழித்தடங்களில் ஓடும் ஒரு டீசல் பேருந்து பொதுவாக ஆண்டுக்கு 100 டன் கரியமில வாயுவை வெளியிடுகிறது. டீசல் வாகனங்களைவிட ஹைட்ரஜன் வாகனங்களுக்கு குறைவான செலவாகும் என்பதால் இது இந்தியாவில் சரக்கு புரட்சியை ஏற்படுத்தும் என்றாா்.