குஜராத்தில் பாவ்நகரில் இருந்து சோம்நாத் வரை சாலை வழியே பிரதமர் ஒருமுறை பயணிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ விமல் சுதாசமா கடிதம் எழுதியுள்ளார்.
குண்டும் குழியுமான இந்த சாலையில் பிரதமர் மோடி பயணித்தால் மட்டுமே கவனம் பெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சோம்நாத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விமல் சுதாசமா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், 'கடலோர நெடுஞ்சாலைக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால், பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் இன்னும் முடிவடையவில்லை.
மேலும் சாலைகள் குண்டும் குழியுமாக அதிக பள்ளங்கள் இருப்பதால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, பிரதமர் நரேந்திர மோடி இந்த நெடுஞ்சாலையில் சாலை வழியே பயணித்து மக்கள் படும் இந்த இன்னல்களை உணர்ந்தால் மட்டுமே இந்த பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்று நம்புகிறேன்.
வருகிற ஆகஸ்ட் 27 ஆம் தேதி இரண்டு நாள் பயணமாக பிரதமர் குஜராத் வரவிருக்கிறார். அப்போது சோம்நாத்திற்கு சாலை வழியாக பயணிக்க வேண்டும். சோம்நாத் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்னையை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் யமல் வியாஸ், இந்த கடிதம் விளம்பரம், அரசியலுக்காக காங்கிரஸ் எம்எல்ஏ எழுதியதாக விமர்சனம் செய்துள்ளார்.