தெலங்கானாவில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசிய பாஜக எம்எல்ஏவைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
தெலங்கானா மாநிலம் கோஷாமால் தொகுதியின் எம்எல்ஏவான ராஜா சிங் மேடை நகைச்சுவைக் கலைஞரான முனாவர் பரூக்கி என்பவரை விமர்சித்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் நபிகள் நாயகம் பற்றி அவதூறான கருத்தைத் தெரிவித்ததுடன் நபிகள் பற்றி தொலைக்காட்சி விவாதத்தில் பேசி சர்ச்சையான நூபுர் சர்மாவின் கருத்தை மீண்டும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: நடிகையும், பாஜக தலைவருமான சோனாலி போகத் காலமானார்
அந்த விடியோ வைரலானதால் எம்எல்ஏவின் பேச்சைக் கேட்ட இஸ்லாமியர்கள் பலர் நேற்று (திங்கள்கிழமை) நள்ளிரவில் ராஜா சிங்குக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியதாக வழக்குப் பதியப்பட்டு இன்று காலை எம்எல்ஏ ராஜா சிங் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்தக் கைது நடவடிக்கைக்கு எதிராக ஜங்கவுன் மாவட்டத்தில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், கலந்துகொண்ட அம்மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமாரையும் காவல்துறை கைது செய்தது.