திகார் சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 20 வயது கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆகஸ்ட் 22-ம் தேதி திகார் மத்தியச் சிறை எண் 5ல் உள்ள கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கைகலப்பாக மாறியது.
கைதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டதில், கைதி சமீர் கானுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. திடீரென அவர் சரிந்து விழுந்தார்.
உடனே அவர் சிறை மருந்தகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து அவர் டிடியூ மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இவர்களின் மோதல் காட்சி அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
உயிரிழந்த 20 வயதான சமீர் பலாஸ்வா பால் பண்ணை பகுதியில் வசிப்பவர். அவர் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக மெட்ரோபாலிட்டன் நீதிபதியால் விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.