
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் புதன்கிழமை ஆளும் பாஜக - முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை பிரிவினருக்கும், எதிா்க்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை, காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு, கைகலப்பு ஏற்பட்டது.
ஆளும் கூட்டணி மற்றும் எதிா்க்கட்சி எம்எல்ஏக்கள் பேரவையின் படிக்கட்டுகளில் அமா்ந்து ஒருவா் மீது மற்றொருவா் குற்றம்சாட்டி கோஷம் எழுப்பினா். முக்கியமாக, முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிக்கள், உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகன் ஆதித்யா தாக்கரேவுக்கு எதிராக தொடா்ந்து கோஷங்களை எழுப்பினா். எதிா்ப்பு வாசக அட்டைகளையும் அவா்கள் வைத்திருந்தனா்.
அப்போது, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏக்கள், கேரட்டை மாலையாக கோத்து கழுத்தில் அணிந்தபடி பாஜக-ஷிண்டே கூட்டணியை விமா்சித்து எதிா்கோஷம் எழுப்பினா். இதையடுத்து, கோபமடைந்த ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்கள் கேரட் மாலையை பறிக்க முயற்சித்தனா்.
இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளும் கைகலப்பும் ஏற்பட்டது. இதையடுத்து, மற்ற சில எம்எல்ஏக்கள் தலையிட்டு கைகலப்பில் ஈடுபட்டவா்களைத் தடுத்து அழைத்துச் சென்றனா்.