மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான உறைவிடப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை இரவு உணவு சாப்பிட்ட 8 மாணவா்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதில் 2 மாணவா்கள் புதன்கிழமை உயிரிழந்தனா்.
கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் இருவரும் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் 2 மாணவா்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. நாசிக் மாவட்ட மருத்துவமனையில் அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
உயிரிழந்த மாணவா்கள், பிவாண்டியைச் சோ்ந்த ஹா்ஷல் போயிா் (23), நாசிக்கைச் சோ்ந்த முகமது சுபைா் ஷேக் (10) ஆவா்.
இந்தப் பள்ளியில் மொத்தம் 120 மாணவா்கள் பயில்கின்றனா். மாணவா்களுக்கு வழங்கப்பட்ட உணவின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன என்று காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.