உ.பி.யைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி அடிக்கடி சண்டையிடுவதாகக் கூறி கடந்த ஒரு மாதமாக பனை மரத்தில் வசித்து வருகிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம், மாவ் மாவட்டம் கோபகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் ராம் பிரவேஷ்(42). இவருக்கும் இவரது மனைவிக்கும் கடந்த 6 மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் ராம் பிரவேஷை அவரது மனைவி அவ்வப்போது தாக்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அவர் கடந்த ஒரு மாதமாக 80 அடி உயர பனை மரத்தில் ஏறி, வசித்து வருகிறார்.
அதேசமயம் நண்பர்கள், உறவினர்கள் கொண்டு வரும் உணவு, தண்ணீரை கயிறு மூலமாக மேலே எடுத்துக்கொள்கிறார். நள்ளிரவு மரத்தில் இருந்து கீழே இறங்கி வரும் பிரவேஷ் இயற்கை உபாதைகளை கழித்து விட்டு மீண்டும் மரத்திற்கே சென்றுவிடுகிறார். கிராம மக்கள் பிரவேஷை கீழே இறங்கி வரும்படி பலமுறை கூறியும் அதனை அவர் ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக காவல்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினரும் பிரவேஷை கீழே இறங்கி வரும்படி கோரிக்கை வைத்தனர். ஆனால் அதனையும் அவர் மறுத்துவிட்டார். பின்னர் அவர் மரத்தில் இருப்பதை விடியோ எடுத்த காவல்துறையினர் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். ராம் பிரவேஷின் தந்தை ஸ்ரீகிஷுன் ராம் கூறுகையில், தனது மகனைப் பார்ப்பதற்காக கிராமத்தைச் சுற்றியுள்ள மக்கள் தினமும் அந்த இடத்திற்கு வருகிறார்கள் என்றார்.