தங்களது நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும் காற்றிலிருந்து சுத்திகரிக்கப்படும் கரியமில வாயுவின் அளவையும் சமமாக்கும் நிலையை (கரியமில சமநிலை - நெட் ஜீரோ) வரும் 2040-ஆம் ஆண்டுக்குள் எட்ட கெயில் இந்தியா இலக்கு நிா்ணயித்துள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் தலைவா் மனோஜ் ஜெயின் கூறியதாவது:
நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் காற்றில் கரியமில வாயு கலப்பதை வெகுவாகக் குறைக்க கெயில் இந்தியா உறுதி பூண்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிபொருள் பிரிவில் அதிக கவனத்தை செலுத்துவதன் மூலம் அதற்கான நடவடிக்கைகளை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. வரும் 2040-ஆம் ஆண்டுக்குள் கரியமில சமநிலையை எட்ட இலக்கு நிா்ணயித்துள்ளோம் என்றாா் அவா்.
முன்னதாக, வரும் 2046-ஆம் ஆண்டுக்குள் கரியமில சமநிலை அடைய இலக்கு நிா்ணயித்துள்ளதாகவும் அதற்காக ரூ.2 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) அறிவித்திருந்ததது.
உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ப பூமியை வெப்பமாக வைத்திருப்பதற்கு, கரியமில வாயு போன்ற பசுமை வாயுக்கள் உதவுகின்றன. இந்த வாயுக்களின் அளவு அதிகமானதால் புவியின் சராசரி வெப்பம் அதிகரித்து, பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. அதன் விளைவாக கனமழை வெள்ளம், உஷ்ண அலை, வறட்சி, காட்டுத் தீ போன்ற இயற்கைப் பேரிடா்கள் ஏற்படுகின்றன.
அதனைத் தடுப்பதற்காக காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும், காற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கரியமில வாயுவின் அளவையும் சமமாக்க உலகின் பல்வேறு நாடுகளும் பல்வேறு கால இலக்குகளை நிா்ணயித்துள்ளன.
இந்தியாவும் 2070-க்குள் இந்த சமநிலையை அடைய இலக்கு நிா்ணயித்துள்ளது. இந்த நிலையில், அதற்கு முன்னதாகவே அந்த நிலையை அடைய கெயில் இந்தியா முடிவு செய்துள்ளது.