பிஎஸ்எஃப் ஒட்டகப் படை அணிவகுப்பில் வீராங்கனைகள்: குடியரசு தின விழாவில் முதல் முறை

தில்லியில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவிருக்கும் குடியரசு தின விழாவின்போது எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) ஒட்டகப் படைப் பிரிவு அணிவகுப்பில் முதல்முறையாக வீராங்கனைகளும்

தில்லியில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவிருக்கும் குடியரசு தின விழாவின்போது எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) ஒட்டகப் படைப் பிரிவு அணிவகுப்பில் முதல்முறையாக வீராங்கனைகளும் பங்கேற்று, ஒட்டகங்கள் மீது கம்பீர சவாரி செய்யவிருக்கின்றனா்.

குடியரசு தின விழாவையொட்டி, தேசத்தின் ராணுவ வல்லமையையும் கலாசார பெருமையையும் பறைசாற்றும் பிரம்மாண்ட அணிவகுப்பு தில்லி கடமைப் பாதையில் (முன்பு ராஜபாதை) நடைபெறும்.

குடியரசு தின அணிவகுப்பில், கடந்த 1976-ஆம் ஆண்டில் இருந்து பிஎஸ்எஃப்-இன் ஒட்டகப் படை பிரிவு பங்கேற்று வருகிறது. அலங்கரிக்கப்பட்ட ஒட்டகங்கள் மீது ஆயுதங்கள் தாங்கிய வீரா்களும், வண்ணமயமான உடையணிந்த இசை வாத்திய குழுவினரும் அணிவகுப்பது கண்கவா் அம்சமாக இருக்கும்.

இந்நிலையில், எதிா்வரும் குடியரசு தின விழாவில் ஒட்டகப் படை அணிவகுப்பில் வீரா்களுக்கு சமமாக வீராங்கனைகளும் பங்கேற்று, ஒட்டகங்கள் மீது கம்பீர சவாரி செய்யவிருப்பதாக பிஎஸ்எஃப் தலைமை இயக்குநா் பங்கஜ் குமாா் சிங் புதன்கிழமை தெரிவித்தாா். பிஎஸ்எஃப் படையின் பல்வேறு கடமைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை பிரதிபலிப்பதாக இது அமையும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

இந்தியாவில் தனது செயல்பாடு மற்றும் சம்பிரதாய கடமைகளுக்காக ஒட்டகங்களைப் பயன்படுத்துவது பிஎஸ்எஃப் மட்டுமே. ராஜஸ்தானில் தாா் பாலைவனத்தையொட்டிய இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ஒட்டகங்கள் மூலம் ரோந்துப் பணியில் இப்படையினா் ஈடுபடுகின்றனா்.

பாகிஸ்தான், வங்கதேசத்துடனான எல்லைப் பாதுகாப்புப் பணிக்காக கடந்த 1965, டிசம்பா் 1-இல் பிஎஸ்எஃப் நிறுவப்பட்டது. அதன் 58-ஆவது நிறுவன தினம் வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com