புதுதில்லி: குறுகிய காலத்தில் இந்தியா தனது மக்கள்தொகையில் 90 சதவீதக்கும் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியது ஆச்சரியமாக இருக்கிறது என பில் மற்றும் மெலிண்டா ஃபிரெஞ்ச் கேட்ஸ் அறக்கட்டளை துணைத் தலைவர் மெலிண்டா கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள மெலிண்டா ஃபிரெஞ்ச் கேட்ஸ், தில்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து பேசினார்.
அப்போது, கரோனா தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக இந்தியாவுக்கு வாழ்த்துகள். குறுகிய காலத்தில் இந்தியா தனது மக்கள்தொகையில் 90 சதவீதக்கும் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியது ஆச்சரியமாக இருக்கிறது. தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களிடம் இருந்து அதன் தாக்கத்தைக் குறைப்பதற்கான முன்னோடி கண்டுபிடிப்புகளில் இந்தியா ஒரு வெற்றியாளனாக இருந்து வருகிறது. தொற்று காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட மாபெரும் முயற்சிகள் பாராட்டத்தக்கது.
இந்தியாவின் வெற்றிகரமான கரோனா தடுப்பூசி இயக்கத்திற்காக மத்திய சுகாதார அமைச்சருக்கு மெலிண்டா கேட்ஸ் வாழ்த்து தெரிவித்தார் மற்றும் தொற்றுநோயை நிர்வகிப்பதில் இந்திய அரசாங்கம் மேற்கொண்ட மகத்தான முயற்சிகளைப் பாராட்டினார். மத்திய சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் பல முன்முயற்சிகள் வளர்ச்சியை மேம்படுத்தவும், முன்பை விட பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வாய்ப்புகளை வழங்கவும் உதவியது என்றும் அவர் பாராட்டினார்.
விரிவான ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் டிஜிட்டல் சுகாதாரம் போன்றவற்றில் சிறப்பான பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதை உலகின் மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார்.
பின்னர், இந்தியாவின் சுகாதாரத் துறை சீர்திருத்தங்களில் உள்ள ஆற்றல் மற்றும் வாய்ப்புகள் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடன் மெலிண்டா கேட்ஸ் விவாதித்தார்.
இந்தியாவின் சுகாதார முன்னுரிமை திட்டங்களுக்கும், தற்போதுள்ள நோய்களை ஒழிப்பதற்கும் உதவுவதாக பில்கேட்ஸ் அறக்கட்டளை உறுதியளித்துள்ளது.