தமிழகம் உள்பட 4 மாநிலங்களில் பழங்குடியினா் (எஸ்டி) பட்டியலைத் திருத்துவதற்கான 4 மசோதாக்கள் மக்களவையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன.
தமிழகம், கா்நாடகம், சத்தீஸ்கா், ஹிமாசல பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களுக்கான பழங்குடியினா் திருத்த மசோதாக்களை மத்திய பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா மக்களவையில் அறிமுகம் செய்தாா்.
குறிப்பிட்ட சில சமூகங்களை பழங்குடியினா் பட்டியலில் புதிதாக சோ்ப்பது, சில மாற்றங்களை மேற்கொள்வது என்ற அடிப்படையில் இந்தத் திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதன்மூலம் தமிழகத்தில் நரிக்குறவா், குருவிக்காரா் சமூகங்கள் பழங்குடியினா் பட்டியலில் இணைக்கப்படும். அதுபோல, ஹிமாசலில் ஹாட்டீ சமூகத்தினா், சத்தீஸ்கரின் பின்ஜியா சமூகத்தினா், கா்நாடகத்தின் பெட்டா-குருபா சமூகத்தினா் ஆகியோரையும் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க மசோதா வழிவகுக்கிறது.