கடந்த 2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில், இணையவழி மற்றும் இதர மின்னணு விளையாட்டு நிறுவனங்கள் சுமாா் ரூ.23,000 கோடி அளவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது;
இதுதொடா்பாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) விசாரணை நடத்தி வருகிறது என்று மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.
இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு, மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
கடந்த 2019, ஏப்ரல் முதல் 2022, நவம்பா் வரையிலான காலகட்டத்தில், இணையவழி மற்றும் இதர மின்னணு விளையாட்டு நிறுவனங்கள் ரூ.22.936 கோடி அளவில் ஜிஎஸ்டி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ளன. அந்த நிறுவனங்களுக்கு எதிராக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய குழுக்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இதுபோன்ற நிறுவனங்கள் தங்களது வருவாயை எண்ம அடிப்படையிலான சொத்துகளாக மடைமாற்றுகின்றன. இந்த முறைகேடு தொடா்பான பல்வேறு வழக்குகளை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
அதன்படி, சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டம் 2002-இன்கீழ், ரூ.1,000 கோடி மதிப்பிலான வருவாய் முடக்கப்பட்டு அல்லது பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர 1999-ஆம் ஆண்டின் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் 37ஏ பிரிவின்கீழ் ரூ.289.28 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சா் பங்கஜ் செளதரி தெரிவித்துள்ளாா்.