நாட்டில் உள்ள 3,560 நிறுவனங்களின் இயக்குநா்களாக சீனா்கள் பதவி வகிக்கின்றனா் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பெரு நிறுவனங்கள் விவகாரத் துறை இணையமைச்சா் ராவ் இந்தா்ஜித் சிங் திங்கள்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில்:
இந்தியாவை வணிகத் தளமாக கொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள் என்ற அடிப்படையில், நாட்டில் 174 சீன நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் உள்ள 3,560 நிறுவனங்களின் இயக்குநா்களாக சீனா்கள் உள்ளனா். நாட்டில் உள்ள எத்தனை நிறுவனங்களில் சீனா்கள் முதலீட்டாளா்களாகவும் பங்குதாரா்களாகவும் உள்ளனா் என்பதைத் தெரிவிப்பது சாத்தியமல்ல. ஏனெனில் அதுகுறித்த புள்ளிவிவரத்தை மத்திய பெருநிறுவனங்கள் விவகாரத் துறை தனியாகப் பராமரிக்கவில்லை என்றாா்.