புற்றுநோய் பாதிப்பும் இறப்பும் மூன்று ஆண்டுகளில் அதிகரிப்பு: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

கடந்த 2020 மற்றும் 2022-க்கு இடைபட்ட மூன்று ஆண்டுகளில் நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அந்நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன
புற்றுநோய் பாதிப்பும் இறப்பும் மூன்று ஆண்டுகளில் அதிகரிப்பு: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

கடந்த 2020 மற்றும் 2022-க்கு இடைபட்ட மூன்று ஆண்டுகளில் நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அந்நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
 மாநிலங்களவையில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு செவ்வாய்க்கிழமை பதில் அளித்து அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:
 தேசிய சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக புற்றுநோய், நீரிழிவு, இதய நோய், வலிப்பு நோய்களை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தில் (என்.பி.சி.டி.சி.எஸ்.) மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் சார்பில் தொழில்நுட்ப உதவியும் நிதி உதவியும் அளிக்கப்பட்டு வருகின்றன.
 இந்நோய்கள் தொடர்பாக மாநில அரசுகள் தரும் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த உதவிகள் செய்யப்படுகின்றன.
 இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் தேசிய புற்றுநோய் பதிவு தரவுகளின்படி, நாட்டில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கடந்த 2020-இல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,92,179 பேராக இருந்தது. இதுவே 2021-இல் 14,26,447-ஆகவும், 2022-இல் 14,61,427-ஆகவும் அதிகரித்தது.
 புற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2020-இல் 7,70,230 பேராக இருந்தது. இதுவே 2021-இல் 7,89,202 பேராகவும், 2022-இல் 8,08,555 பேராகவும் அதிகரித்தது.
 என்.பி.சி.டி.சி.எஸ். திட்டத்தின் ஒரு பகுதியாக புற்றுநோய் கவனத்தில் கொள்ளப்படுகிறது. இந்நோயைத் தடுப்பதற்காக உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், போதிய பணியாளர்களை நியமித்தல், சுகாதார முன்னேற்றம் மற்றும் விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி வருகிறது.
 புற்றுநோய் உள்பட தொற்றா நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையங்களாக நாட்டில் 707 மாவட்டங்களில் தொற்றா நோய்களுக்கான மையங்கள் (என்.சி.டி), 268 மாவட்டங்களில் பராமரிப்பு மையங்கள், 5,541 சமூக சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 மேலும் இத்திட்டத்தின் கீழ் 30 வயதைக் கடந்தவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு அவர்களுக்கு வாய்வழி, மார்பு, கர்ப்பப்பை ஆகிய இடங்களில் புற்றுநோய் உள்ளதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பரிசோதனைகள் அனைத்தும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் செயல்படும் சுகாதாரம் மற்றும் நல மையங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. சமூக அளவில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் புற்றுநோய் தடுக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
 அத்துடன் பொதுமக்களிடையே புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆரோக்கியமான வாழ்க்கை சூழல், தேசிய புற்றுநோய் தினம், உலக புற்றுநோய் தினம் பற்றிய விழிப்புணர்வு பிரசாரங்கள் ஊடகங்கள் மூலம் செய்யப்பட்டு வருகின்றன.
 இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் மூலம் நடத்தப்படும் கட்டமைப்பு இந்தியா இயக்கத்தின் மூலமும், ஆயுஷ் அமைச்சகத்தின் மூலம் நடத்தப்படும் பல்வேறு யோகா பயிற்சிகள் மூலமும் புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com