பரேலி: உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில், மருத்துவரான மனைவியைக் கொன்றுவிட்டு, காணாமல் போனதாக நாடகமாடிய ஆயுர்வேத மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
34 வயதான பெண் மருத்துவர் நவம்பர் 26ஆம் தேதி லக்கிம்பூர் கேரி பகுதியிலிருந்து காணாமல் போனதாக, அவரது கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
ஆயுர்வேத மருத்துவரான அபிஷேக் அவஸ்தி (36), திங்கள்கிழமை விசாரணைக்கு அழைக்கப்பட்டு உரிய முறையில் விசாரித்ததில், அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
தனது மனைவியைக் கொன்று, ஆம்புலன்ஸில் 400 கிலோ மீட்டர் தொலைவு கொண்டு சென்று கங்கை நதிக்கரை கர் முக்தேஸ்வர் பகுதியில் எரியூட்டிவிட்டு திரும்பிய அபிஷேக், காவல்நிலையத்தில் தனது மனைவி வீட்டிலிருந்து சில விலை மதிப்புமிக்க பொருள்களுடன் காணாமல் போய்விட்டதாகப் புகார் அளித்துள்ளார்.
ஆனால், அபிஷேக் மற்றும் அவரது மனைவிக்கு இடையே நல்லுறவு இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்த பிறகு, அவரை காவல்துறையினர் கண்காணித்த போதுதான், தனது மனைவியின் உடலை தந்தையுடன் ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்று எரியூட்டிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டார். அவரும், அவரது தந்தையும் கைது செய்யப்பட்டனர்.
விபத்தில் மனைவி இறந்துவிட்டதாகக் கூறி ஆம்புலன்ஸில் கொண்டு சென்று, அபிஷேக் எரியூட்டியிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.