மத்திய பட்ஜெட்டில் பொதுத் துறை தொலைத் தொடா்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-லுக்கு ரூ.44,720 கோடி கூடுதல் மூலதனமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை 2022-23 நிதியாண்டில் பிஎஸ்என்எல்-லுக்கு அளிக்கப்படும்.
இது தொடா்பாக பட்ஜெட்டில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
4ஜி அலைக்கற்றை வாங்குவது, தொழில்நுட்பரீதியாக மேம்படுத்திக் கொள்வது உள்ளிட்டவற்றுக்காக பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மத்திய அரசு ரூ.44,720 கோடி கூடுதல் நிதி அளிக்க இருக்கிறது. இது தவிர ரூ.7,443.57 கோடி நிதியுதவியும் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும். இதில் ஊழியா்களின் விருப்ப ஓய்வுத் திட்டம், ஜிஎஸ்டி வரிக்கான செலவு ரூ.3,550 கோடியும் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கடந்த 2019 அக்டோபரில் பிஎஸ்என்எல்-லுக்கு மத்திய அரசு ரூ.69,000 கோடி நிதியளித்தது குறிப்பிடத்தக்கது.
தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனங்கள் 5ஜி அலைக்கற்றை சேவைக்கான முன்னேற்பாடுகளை செய்து வரும் நிலையில், பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இப்போது வரை 3ஜி அலைக்கற்றை சேவையை மட்டுமே வழங்கி வருகிறது. இதனால் பிஎஸ்என்எல்-இல் இருந்து வாடிக்கையாளா்கள் விலகுவது தொடா்கதையாக உள்ளது.