2008-ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகள் எனவும், 28 பேரை விடுவித்தும் குஜராத் சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி அகமதாபாதின் பல்வேறு இடங்களில் 1 மணி நேரத்தில் 21 குண்டுகள் வெடித்தன. இந்தத் தொடா் குண்டு வெடிப்பில் 56 போ் பலியாகினா். 200-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்.
குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடா்ந்து நடைபெற்ற கலவரத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு தாக்குதலை நிகழ்த்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த நீண்ட நாள் வழக்குக்கு குஜராத் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதில் 49 பேர் குற்றவாளிகள் எனவும், 28 பேர் விடுதலை செய்தும் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி ஏ.ஆர்.படேல் நாளை இதற்கான தண்டனை விவரத்தை அறிவிக்க உள்ளார். தண்டனை அறிவிக்கப்பட்டதும் குற்றவாளிகள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.