ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசு பொறுமை காப்பதை பலவீனம் என்று தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது என மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் இதுபற்றி அவர் கூறியதாவது:
"நீதிமன்ற முடிவைப் பின்பற்ற வேண்டும். நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு பின்பற்றப்படவில்லை. இது என்ன ஆணவம்? பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு இந்த விவகாரத்தைக் கட்டுப்பாட்டுடன் கையாள்கிறது. இதை முக்கியமான விஷயமாக அரசு கருதுவதால், கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கிறது. அதை பலவீனம் என்று தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது.
இதையும் படிக்க | மணிப்பூர் பேரவைத் தேர்தல்: பிப்.21-ல் ராகுல் காந்தி பிரசாரம்
எந்தக் காலத்தில் நாம் வாழ்கிறோம். பெண்களின் முகத்தை மறைக்க வேண்டுமா? இதைத் தீவிரமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். முற்போக்கு முஸ்லிம்கள் இதுகுறித்து சிந்திக்க வேண்டும். இது தேவையற்றது. நீங்கள் பலிகிடா ஆக்கப்படுகிறீர்கள்.
உங்கள் மதம் சார்ந்த பழக்கவழக்கங்களை யாரும் எதிர்க்கவில்லை. உங்களுக்கு அனைத்து சுதந்திரமும் இருக்கிறது என்பதை முஸ்லிம் குழந்தைகளிடம் கூறிக்கொள்கிறேன். ஆனால், இன்னும் வகுப்புவாத உணர்வுகள் தூண்டப்படுகின்றன.
ஹிஜாப் தொடர்பாக பள்ளிகளில் யாரும் பிரச்னைகளை உண்டாக்கினால், காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுத்து அவர்களை சிறையிலடைக்கும்.
ஹிஜாப் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவாக முன்வைக்க வேண்டும். முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்று நீங்கள் கூறினால் அதை முன்னெடுத்துச் செல்லுங்கள். மற்றபடி, இதர கட்சிகள் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவைப் பின்பற்றி வகுப்புகளுக்குச் செல்லுமாறு மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்.
கர்நாடகம் சமூக நல்லிணக்கத்துக்கும் நல்ல கலாசாரத்துக்கும் பெயர்போனது. இந்த விவகாரம் அவசியமற்றது" என்றார்.