இந்தியா - உக்ரைன் இடையே இயக்கப்படும் விமானங்களுக்கான கட்டுப்பாடுகளை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வியாழக்கிழமை நீக்கியுள்ளது.
உக்ரைனில் போர்ப் பதற்றம் நிலவுவதை தொடர்ந்து அத்தியாவசிய தேவைகளுக்காக அந்நாட்டிலிருக்கும் இந்தியர்கள் நாடு திரும்புமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,
இந்தியா - உக்ரைன் இடையே இயக்கப்படும் விமானங்கள் மற்றும் இருக்கைகளுக்கான எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது. தேவைகளுக்கேற்ப எத்தனை விமானங்களை வேண்டுமானாலும் இயக்கிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
தேவைகளுக்கேற்ப விமான சேவைகளை அதிகரிக்க இந்திய விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | நாட்டில் புதிதாக 30,757 பேருக்கு கரோனா; 541 பேர் பலி
சோவியத் யூனியன் கடந்த 1991-ஆம் ஆண்டில் சிதறியபோது, அதில் அங்கமாக இருந்த உக்ரைன் சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது. ரஷிய எல்லையையொட்டி அமைந்துள்ள அந்த நாடு, சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் இணைந்தால் அது தங்களது பாதுகாப்புக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷியா கருதுகிறது.
உக்ரைனை தங்களது அமைப்பில் இணைக்க மாட்டோம் என்று நேட்டோ உறுதிமொழி அளிக்க நேட்டோவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், உக்ரைன் எல்லையருகே சுமாா் 1 லட்சம் படையினரை ரஷியா குவித்துள்ளது. இதனால் அந்த நாடு உக்ரைனை ஆக்கிரமிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளதால் ரஷியாவுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது.