கர்நாடகத்தின், சாமராஜநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி பள்ளியில் கழிப்பறை கோரி அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சாமராஜநகர் மாவட்டம், குண்ட்லுப்பேட்டை அருகே உள்ள அன்னொருகேரி அரசுப் பள்ளியில் படிக்கும் ஜி.பவித்ரா, தனது கடிதத்தில், இப்பள்ளியில் படிக்கும் 132 மாணவர்களுக்கும் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது.
இதனால், இடைவெளியின்போது மாணவர்கள் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. சுமார் 30 நிமிடங்கள் காத்திருக்கவேண்டி உள்ளது. இது எனக்கு மிகவும் சங்கடமாக உள்ளது. தயவுசெய்து என்னை உங்கள் மகளாகக் கருதி பள்ளி வளாகத்தில் மேலும் ஒரு கழிப்பறை வசதியைக் கட்டுங்கள். நான் எனக்காக சேமித்த ரூ.25 வழங்க தயாராக உள்ளேன் என்று அவர் கூறினார்.
அதே காரணத்திற்காக தான் நான் பள்ளியை விட்டு வெளியேறியதாகவும், மேலும் தன்னை தனது மகளாகக் கருதி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் பொம்மையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பவித்ரா மட்டுமின்றி, எல்லையோர மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் பலர், கூடுதல் கழிப்பறை வசதிக் கோரி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
முன்னதாக, தனது கிராமத்தைச் சாலையில் இணைக்கும் வரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று முதல்வருக்கு கடிதம் எழுதிய சிறுமிக்கு, அம்மாநில முதல்வர் உடனடியாக சாலை அமைத்துக் கொடுத்தார். ஆனால், இந்த கடிதத்துக்கு முதல்வர் பொம்பை இதுவரை பதிலளிக்கவில்லை.
மாநிலத்தில் உள்ள 179 தொடக்க மற்றும் உயர் கல்வி பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்று சமீபத்தில் கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் ஒரு அமர்வில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.