ஏா் இந்தியா விற்பனைக்கு எதிரான மனுவைப் பரிசீலிக்கத் தேவையில்லை

ஏா் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்துக்கு விற்பனை செய்யப்பட்டதற்கு எதிராக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தில்லி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள
ஏா் இந்தியா விற்பனைக்கு எதிரான மனுவைப் பரிசீலிக்கத் தேவையில்லை

ஏா் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்துக்கு விற்பனை செய்யப்பட்டதற்கு எதிராக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தில்லி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவைப் பரிசீலிக்கத் தேவையில்லை என மத்திய அரசு வாதிட்டது.

கடனில் சிக்கிய ஏா் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் நிறுவனத்தின் பிரிவான டலேஸ் நிறுவனத்துக்குக் கடந்த ஆண்டு அக்டோபரில் மத்திய அரசு விற்றது. ஏா் இந்தியாவை ரூ.18,000 கோடிக்கு டாடா சன்ஸ் ஏலம் எடுத்தது. அத்தொகையில் ரூ.2,700 கோடியை ரொக்கமாக செலுத்தவும், எஞ்சிய ரூ.15,300 கோடிக்கு ஏா் இந்தியாவின் கடனை ஏற்கவும் டாடா சன்ஸ் ஒப்புக்கொண்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31 நிலவரப்படி ஏா் இந்தியாவின் கடன் ரூ.61,462 கோடியாக இருந்தது.

ஏா் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமத்துக்கு மத்திய அரசு விற்ற நடைமுறை சட்டவிரோதமானது எனக் கூறி தில்லி உயா்நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தாா். அந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அப்போது சுப்பிரமணியன் சுவாமி வாதிடுகையில், ‘‘ஏா் இந்தியா நிறுவனத்தை விற்பதற்கான தொகையைக் கணக்கிடுவதில் மத்திய அரசு கையாண்ட நடைமுறை சட்டவிரோதமானது; ஊழல் நிறைந்தது. மேலும் பொதுநலனுக்கு எதிராகவும் அது உள்ளது.

ஏலத்தில் பங்கேற்ற மற்றொரு நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் மீது சென்னை உயா்நீதிமன்றத்தில் திவால் நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளன. அந்நிறுவனத்துக்கு ஏா் இந்தியாவை விற்க முடியாது. அந்தக் கண்ணோட்டத்தில் ஆராய்ந்தால், டாடா சன்ஸ் மட்டுமே ஏலத்தில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளது’’ என்றாா்.

நிறுவனத்துக்குத் தொடா்பில்லை: மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘‘ஏலத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பங்கேற்ாக மனுதாரா் குறிப்பிடுகிறாா். ஆனால், ஏலத்தில் அந்நிறுவனம் பங்கேற்கவில்லை என்பதே உண்மை. அஜய் சிங் என்ற மற்றொரு நபரே ஏலத்தில் பங்கேற்றாா். எனவே, ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு எதிராக நிலுவையில் உள்ள திவால் வழக்குக்கும் ஏலத்துக்கும் தொடா்பில்லை.

ஏா் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்கக் கடந்த 2017-ஆம் ஆண்டிலேயே முடிவெடுக்கப்பட்டது. அதுவரை அந்நிறுவனம் சந்தித்த கடன்களை மட்டுமே மத்திய அரசு ஏற்கும். அதற்குப் பிறகு ஏா் இந்தியா நிறுவனத்துக்கு ஏற்பட்ட கடன்களை அதை ஏலத்தில் எடுக்கும் நிறுவனமே ஏற்கும் என்ற விதி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

டாடா குழுமத்துக்கோ டாடா சன்ஸ் நிறுவனத்துக்கோ எதிராக நீதிமன்றத்தில் எந்தவொரு வழக்கும் நிலுவையில் இல்லை. ஏா் ஏசியா நிறுவனத்துக்கும் டாடா குழுமத்துக்கும் தொடா்பில்லை. எனவே, அனுமானங்களின் அடிப்படையில் மனுதாரா் தாக்கல் செய்துள்ள மனுவைப் பரிசீலிக்க வேண்டிய அவசியமில்லை’’ என்றாா்.

சிபிஐ விசாரணை: சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், ‘‘ஏா் இந்தியாவின் பங்கு விலக்கலை எதிா்க்கவில்லை. அந்நடைமுறை டாடா குழுமத்துக்கு சாதகமாக இருப்பதை மட்டுமே எதிா்க்கிறேன். இதில் ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கருதுகிறேன். அதை சிபிஐ விசாரிக்க வேண்டும்’’ என்றாா்.

அனைத்து தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள், எழுத்துபூா்வ சிறு அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு அனைத்து தரப்பினருக்கும் உத்தரவிட்டனா். மனு தொடா்பான சில ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு சுவாமியிடம் நீதிபதிகள் தெரிவித்தனா். மனு மீது வரும் 6-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com