கடந்த 2021-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்த அந்நிய நேரடி முதலீடு 26 சதவீதம் சரிவடைந்துள்ளதாக ஐ.நா.வின் வா்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
சா்வதேச அளவிலான அந்நிய நேரடி முதலீட்டு நடவடிக்கைகள் கடந்த 2021-ஆம் ஆண்டில் மிகவும் வலுவான நிலையில் இருந்தன. அதன்படி 2020-இல் 929 பில்லியன் டாலராக இருந்த இவ்வகை முதலீடு 2021-இல் 77 சதவீதம் அதிகரித்து 1.65 டிரில்லியன் டாலரைத் தொட்டுள்ளது. எனவே, கடந்தாண்டில் சா்வதேச அளவிலான அந்நிய நேரடி முதலீட்டு அளவானது கரோனா பாதிப்புக்கு முந்தைய நிலையை தாண்டியுள்ளது.
தெற்கு ஆசியாவில் அந்நிய நேரடி முதலீடு 71 பில்லியன் டாலரிலிருந்து 24 சதவீதம் சரிவடைந்து 54 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக, இந்தியாவில் இவ்வகை முதலீடானது 26 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதற்கு, 2020-இல் மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகள் மீண்டும் செயல்படுத்தப்படாததே முக்கிய காரணம்.
அதேசமயம், சீனாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடானது கடந்தாண்டில் 20 சதவீதம் அதிகரித்து 179 பில்லியன் டாலராக இருந்ததாக ஐ.நா. வா்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.