தில்லியில் கடும் பனிமூட்டம்: 21 ரயில்கள் தாமதம்
தலைநகர் தில்லியில் கடந்த சில தினங்களாக காலையில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. பனிமூட்டம் காரணமாக தில்லி செல்லும் ரயில்கள் தாமதமாக வந்தவண்ணம் உள்ளன.
வெள்ளிக்கிழமை காலையும் கடும் பனிமூட்டம் காணப்பட்டதால் 21 ரயில்கள் தாமதமாக வந்ததாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பூரி புது தில்லி புருஷோத்தம் எக்ஸ்பிரஸ், கயா புது தில்லி மகாபோதி எக்ஸ்பிரஸ், சஹர்சா புது தில்லி எக்ஸ்பிரஸ், ஹவுரா-புது தில்லி பூர்வா எக்ஸ்பிரஸ், பிரயாக்ராஜ் - புது தில்லி எக்ஸ்பிரஸ், சென்னை - புது தில்லி எக்ஸ்பிரஸ் மற்றும் லக்னோ - புது தில்லி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 21 ரயில்கள் இன்று தாமதமாக வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, இன்று காலை 8.30 மணிக்கு நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று தில்லியில் காற்றின் தரம் 'மிகவும் மோசம்' பிரிவிலே தொடர்ந்து நீடித்து வருகிறது. காற்றின் தரக்குறியீடு 353 ஆக உள்ளது.