மும்பை டார்டியோ பகுதியிலுள்ள 20 மாடி கட்டடம் ஒன்றில் இன்று (சனிக்கிழமை) காலை ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
மும்பை "காந்தி மருத்துவமனை எதிரே உள்ள 20 தளங்கள் கொண்ட கமலா கட்டடத்தில் காலை 7 மணியளவில் பெரும்பாலான குடியிருப்பு வாசிகள் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து 18-ஆவது மாடியில் ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இதில் காயமடைந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள வெவ்வேறு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் நாயர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட 7 பேரில் 5 பேர் உயிரிழந்துவிட்டனர். பாட்டியா மருத்துவமனை மற்றும் கஸ்தூரிபா மருத்துவமனையில் தலா ஒருவர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அளித்துள்ளார்.
இதோபோன்று தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மகாராஷ்டிரம் அரசு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ளது.
மேலும் தீ விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என துணை முதல்வர் அஜித் பவார் உறுதியளித்துள்ளார்.