யூடியூப்பில் பதிப்புரிமை மீறிய திரைப்படத்தை வெளியிட்ட விவகாரத்தில், கூகுளின் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை மற்றும் நிறுவனத்தின் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட் இயக்குநர் சுனில் தர்ஷன் சுந்தர் பிச்சைக்கு எதிராக அளித்த புகாரில், "2017ஆம் ஆண்டு வெளியான 'ஏக் ஹசினா தி ஏக் தீவானா தா' திரைப்படத்தின் பதிப்புரிமையை நான் யாருக்கும் விற்கவில்லை. ஆனால், யூடியூப்பில் வெளியாக லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது. விதிகளை அப்பட்டமாக மீறி கோடி கணக்கில் சம்பாதித்துள்ளனர். எனது திரைப்படம் சட்டவிரோதமாக வெளியிடப்பட்டதில் பெரிய அளவிலான பணம் ஈட்டப்பட்டுள்ளது.
சுந்தர் பிச்சை கூகுளை பிரதிநிதித்துவப்படுத்துவதால் அவர்தான் இதற்கு பொறுப்பு. நான் இயக்கிய 'ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா' திரைப்படம் 1 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதை நான் கண்காணித்துள்ளேன். இதுகுறித்து நிறுவனத்திடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சுந்தர் பிச்சையுடன், கெளதம் ஆனந்த் (யூடியூப் தலைவர்), குறைதீர்ப்பு அலுவலர் ஜோ க்ரியர் மற்றும் நான்கு ஊழியர்களின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா' திரைப்படத்தை எழுதி, தயாரித்து இயக்கியுள்ளார் சுனீல் தர்ஷன். சிவ தர்ஷன், நடாஷா பெர்னாண்டஸ் மற்றும் உபென் படேல் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷன், சுந்தர் பிச்சைக்கு வழங்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.