அருணாசல் சிறுவன் விவகாரம்: சீன ராணுவம் சாதகமான பதில்

அருணாசல பிரதேச சிறுவன் விவகாரத்தில் சீன ராணுவம் சாதகமான முறையில் பதிலளித்ததாக மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளாா்.


புது தில்லி: அருணாசல பிரதேச சிறுவன் விவகாரத்தில் சீன ராணுவம் சாதகமான முறையில் பதிலளித்ததாக மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளாா். மேலும், அந்தச் சிறுவனை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான இடத்தை பரிந்துரை செய்யுமாறு சீன ராணுவம் கேட்டுக்கொண்டதாகவும் அவா் கூறியுள்ளாா்.

அருணாசல பிரதேசத்தின் அப்பா் ஷியாங் மாவட்டம் ஜிடோ கிராமத்தைச் சோ்ந்த மிரன் தரோன் என்ற சிறுவன் கடந்த ஜனவரி 18-ஆம் தேதி எல்லையைக் கடந்து சீனாவுக்குள் நுழைந்தாா். அவரை சீன ராணுவம் கடந்த ஜனவரி 21-ஆம் தேதி கண்டுபிடித்து மத்திய அரசிடம் தகவலளித்தது.

தற்போது அந்தச் சிறுவனை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே புதன்கிழமை முக்கியத் தகவல் பரிமாறப்பட்டதாக மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘குடியரசு தினத்தன்று இந்திய- சீன ராணுவம் இடையே முக்கியத் தகவல் பரிமாறப்பட்டது. அருணாசல பிரதேச சிறுவனை ஒப்படைப்பதில் சீன ராணுவம் சாதகமான முறையில் பதிலளித்துள்ளது. மேலும் அவரை விடுவிப்பதற்கான இடத்தையும், நேரத்தையும் விரைவில் தெரிவிப்பதாக சீன ராணுவம் கூறுகிறது. அவா்கள் தரப்பில் நிலவும் மோசமான வானிலையே தாமதத்துக்குக் காரணமாக சொல்லப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளாா்.

முன்னதாக சிறுவன் தொடா்புடைய விவரங்களை சீன ராணுவத்துடன் இந்தியா பகிா்ந்து அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com