சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பேரணிகளுக்கு தடை தொடரும் என இந்திய தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசம், உத்தரண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா சட்டப்பேரவைகளுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 10-ல் தொடங்கி மார்ச் 7 வரை நடைபெறவுள்ளன.
இதற்கிடையே கரோனா மூன்றாம் அலை வேகமாக பரவிய காரணத்தால் ஜனவரி 31 வரை 5 மாநிலங்களிலும் பேரணிகள், பொதுக்கூட்டங்களை நடத்த அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வாக்குப்பதிவு தொடங்க 10 நாள்களே உள்ள நிலையில் பேரணி, பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில்,
தேர்தல் பேரணிகளுக்கான தடை பிப்ரவரி 11 வரை தொடரும். வெளியரங்கு கூட்டத்தில் 1,000 பேரும், உள்ளரங்கு கூட்டத்தில் 500 பேரும் பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும், வீடு வீடாக சென்று 20 பேர் வரை பிரசாரம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வீடு வீடாக சென்று பிரசாரம் செய்ய 10 பேருக்கு, உள்ளரங்கு கூட்டத்தில் பங்கேற்க 300 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.