தில்லியில் 20 வயதான இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்வைக் கண்டித்து ‘பல இந்தியர்கள் பெண்களை மனிதர்களாகக் கருதுவதில்லை' என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த குடியரசு நாளில் (ஜன.26) தில்லியின் ஷாதரா மாவட்டத்தைச் சேர்ந்த கஸ்தூர்பா நகரில் முன்பகை காரணமாக ஒரு கும்பல் 20 வயதான இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அவரின் தலைமுடியை வெட்டி செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
இதை வேடிக்கைப் பார்த்த அக்கம்பக்கத்தினரும் அப்பெண்ணுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன் சில பெண்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை அடிக்கும் காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தில்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால் அவர் டிவிட்டர் பக்கத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கும் விடியோவை வெளியிட்டு ’இந்தக் கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். தில்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்புகிறேன்’எனத் தெரிவித்தார்.
அதன்பின் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் 14 வயது சிறுவன், 8 பெண்கள் உள்பட 14 பேரை கைது செய்தனர்.
அந்த நிகழ்வைக் கண்டித்து பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன் டிவிட்டர் பக்கத்தில்,
‘20 வயது பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ நமது சமூகத்தின் மிகவும் குழப்பமான முகத்தை அம்பலப்படுத்துகிறது. கசப்பான உண்மை என்னவென்றால், பல இந்தியர்கள் பெண்களை மனிதர்களாகக் கருதுவதில்லை. இந்த வெட்கக்கேடான உண்மை ஒப்புக்கொள்ளப்பட வேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளார்.
कस्तूरबा नगर में 20 साल की लड़की का अवैध शराब बेचने वालों द्वारा गैंगरेप किया गया, उसे गंजा कर, चप्पल की माला पहना पूरे इलाक़े में मुँह काला करके घुमाया। मैं दिल्ली पुलिस को नोटिस जारी कर रही हूँ। सब अपराधी आदमी औरतों को अरेस्ट किया जाए और लड़की और उसके परिवार को सुरक्षा दी जाए। pic.twitter.com/4ExXufDaO3
— Swati Maliwal (@SwatiJaiHind) January 27, 2022