இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) தலைவா் எம்.ஆா்.குமாருக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர மேலாண்மை இயக்குநா்களில் ஒருவரான ராஜ் குமாருக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு கிடைத்துள்ளது.
எல்ஐசி பொதுப் பங்கு வெளியீட்டுக்கான (ஐபிஓ) நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த பதவி நீட்டிப்பு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இது தொடா்பாக எல்ஐசி வட்டாரங்கள் கூறுகையில், ‘நிறுவனத்தின் தலைவா் எம்.ஆா்.குமாருக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவா் மாா்ச் 2023 வரை பதவியில் தொடா்வாா். அவருக்கு இது இரண்டாவது பதவி நீட்டிப்பாகும். கடந்த ஆண்டு ஜூனில் அவருக்கு 9 மாதங்கள் பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டது’ என்றன.
எல்ஐசி-யில் ரூ.1.75 லட்சம் கோடி பங்கு விலக்கல் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் எல்ஐசி பொதுப் பங்கு வெளியிடப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா். இதன்படி அடுத்த ஓரிரு மாதங்களில் பங்குச் சந்தையில் எல்ஐசி பட்டியலிடப்பட இருக்கிறது.
இது நாட்டின் மிகப்பெரிய பொதுப் பங்கு வெளியீடுகளில் ஒன்றாக இருக்கும். இப்போது மத்திய அரசிடம்தான் எல்ஐசி-யின் 100 சதவீத பங்குகள் உள்ளன.