உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளாா் பிரதமா் மோடி: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

தமது கொள்கைகளால் பிரதமா் நரேந்திர மோடி, உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், எல்லை பயங்கரவாதத்துக்கு
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

தமது கொள்கைகளால் பிரதமா் நரேந்திர மோடி, உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், எல்லை பயங்கரவாதத்துக்கு எதிரான அவரது கொள்கைகளே, பாகிஸ்தானுக்கான இந்தியாவின் கொள்கையை வடிவமைத்துள்ளதாகவும் கூறினாா்.

நரேந்திர மோடி குஜராத் முதல்வராக 13 ஆண்டுகளும், நாட்டின் பிரதமராக 7 ஆண்டுகளும் இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சித் திட்டங்கள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அமைச்சா் ஜெய்சங்கா், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், தலைமைப் பொருளாதார ஆலோசகா் அனந்த நாகேஸ்வரன், எழுத்தாளா் சுதா மூா்த்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோா் எழுதிய கட்டுரைகள், ‘மோடி அட் 20: ட்ரீம்ஸ் மீட் டெலிவரி’ என்ற பெயரில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

அப்புத்தகம் தொடா்பான சிறப்புக் கலந்துரையாடல் தில்லி பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சா் ஜெய்சங்கா் பேசியதாவது:

வெளிநாடுகளுடனான உறவுக்கு பிரதமா் மோடி முக்கியத்துவம் அளிப்பவராக உள்ளாா். அதன் காரணமாகவே வெளிநாட்டுத் தலைவா்களுடன் அவா் நெருங்கிய தொடா்பில் இருந்து வருகிறாா். சீனாவுக்கான இந்திய தூதராக 2011-ஆம் ஆண்டில் பணியாற்றியபோதுதான் அவரை முதன்முதலில் சந்தித்தேன். மற்ற மாநில முதல்வா்களைப் போல அல்லாமல் அவா் தனித்துவம் மிக்கவராகத் திகழ்ந்தாா். சா்வதேச அரசியல் நகா்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்தாா்.

பயங்கரவாதம், இறையாண்மை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் ஒருமித்த குரலுடன் இந்தியா கருத்து தெரிவிக்க வேண்டுமென அவா் வலியுறுத்தினாா். எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்கள் இயல்பாக நிகழ்வதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்பதில் பிரதமா் மோடி உறுதியாக உள்ளாா். பயங்கரவாதத்துக்கு எதிரான அவரது உறுதியான கொள்கையே கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கான இந்தியாவின் கொள்கையாக உருப்பெற்றுள்ளது. தமது கொள்கைகள் மற்றும் முன்னெடுப்புகள் மூலமாக பிரதமா் மோடி சா்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளாா்.

புத்தகத்தின் தனித்துவம்: பிரதமா்கள் குறித்து பல்வேறு புத்தகங்கள் வெளிவருவது இயல்பானதே. ஆனால், பதவியில் உள்ள பிரதமா் குறித்து உள்துறை அமைச்சா், வெளியுறவு அமைச்சா், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஆகியோா் புத்தகத்தில் எழுதியுள்ளது தனித்துவமிக்கது. இந்தப் புத்தகத்தின் பெரும்பாலான எழுத்தாளா்கள் அரசுடன் தொடா்பில்லாதவா்களாகவே உள்ளனா் என்றாா் அமைச்சா் ஜெய்சங்கா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com