மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) வழங்கப்பட்டு வரும் 27 சதவீத இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு அளிப்பது தொடா்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக் காலத்தை 13-ஆவது முறையாக மத்திய அரசு நீட்டித்துள்ளது.
ஆணையத்தின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பதற்கான இந்தப் புதிய பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது தெரியவந்துள்ளது.
ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு அளிப்பது தொடா்பான விவகாரத்தை ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிப்பதற்காக அரசியல் சாசனப் பிரிவு 340-இன் கீழ் கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபா் 2-ஆம் தேதி இந்த ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையத்தின் பதவிக் காலம் தொடா்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், ‘ரோகிணி ஆணையம் கால நீட்டிப்பு எதையும் மத்திய அரசிடம் கோரவில்லை. ஜூலை மாத இறுதியில் தனது அறிக்கையை ஆணையம் சமா்ப்பிக்க வாய்ப்புள்ளது’ என்று மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சக செயலா் ஆா். சுப்பிரமணியம் செய்தியாளா்களிடம் அண்மையில் கூறியிருந்தாா்.
இந்தச் சூழலில், ‘நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக் காலம் 13-ஆவது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆணையத்தின் பதவிக் காலத்தை வரும் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்வதற்கான பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது’ என்று மத்திய அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.