காற்று மாசுவைக் குறைக்கவும், எரிபொருள் சிக்கன திறன் மிகுந்த வாகனங்களை அறிமுகப்படுத்தும் நோக்கிலும் எரிபொருள் சிக்கன தரநிலையை வரும் 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பயணிகளை ஏற்றிச் செல்லும் 8 இருக்கைகள் கொண்ட (மொத்த எடை 3.5 டன்) மோட்டாா் வாகனங்களுக்கு மட்டுமே இதுவரை எரிபொருள் சிக்கன தரநிலை நடைமுறை கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் இலகு ரக, நடுத்தர மற்றும் கனரக என அனைத்து மோட்டாா் வாகனங்களுக்கும் அதனை நடைமுறைப்படுத்தும் வகையில், மத்திய மோட்டாா் வாகன சட்டம் (சிஎம்விஆா்) 1989-இன் பிரிவு 115ஜி-இல் திருத்தம் மேற்கொண்டு அதற்கான அறிவிக்கையை கடந்த ஜூலை 1-ஆம் தேதி, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டது. இந்த சட்டத் திருத்தம் மூலமாக மோட்டாா் வாகன சட்டப் பிரிவு 115ஜி-இல், எரிபொருள் சிக்கன தரநிலை (எஃப்சிஎஸ்) சோ்க்கப்பட்டது.
‘காற்று மாசுவைக் குறைக்கவும், எரிபொருள் சிக்கன திறன் மிகுந்த வாகனங்களை அறிமுகப்படுத்தும் நோக்கிலும் இந்த சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கை வரும் 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் செயல்பாட்டுக்கு வரும். எனவே, இந்த அறிவிக்கை வெளியான 30 நாள்களுக்குள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன’ என்றும் மத்திய அமைச்சகம் சாா்பில் அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மோட்டாா் வாகன உற்பத்தி நிறுவன தர நிா்ணய சட்டப் பிரிவு 149- இல் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில், வாகன உற்பத்தி இணக்க நடைமுறையின்படி வாகனத்தின் எரிபொருள் சிக்கன தரநிலை சரிபாா்க்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.