சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அக்கட்சியின் தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே இன்று ஆலோசனை நடத்துகிறார்.
காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனை மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
இதனைத் தொடர்ந்து, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழல் எழுந்ததால், முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜிநாமா செய்யப்பட்டதை அடுத்து, பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஏக்நாத் முதல்வராகவும், பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், தனக்கு ஆதரவளித்த 15 எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தவ் தாக்கரே எழுதிய கடிதத்தில், “இக்கட்டான சூழலில் அச்சுறுத்தலுக்கும், சலுகைகளுக்கும் அடிபணியாமல் கடைசிவரை ஆதரவளித்ததற்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று மாலை சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.