போதைப் பொருள் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஆர்யன் கானின் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்.3-ஆம் தேதி மும்பை-கோவா சென்ற எம்பிரஸ் சொகுசுக் கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி விருந்து நடப்பதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக பயணித்து கோகைன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிக்க | கனமழை எச்சரிக்கை: புணேவில் 144 தடை உத்தரவு; பள்ளிகளுக்கு விடுமுறை
இந்த சோதனையின் போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட 13 பேரை கைது செய்த அதிகாரிகள் அவரை சிறையிலடைத்தனர்.
அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த தேசிய போதைப் பொருள் தடுப்பு அமைப்பு ஆர்யன் கான் நிரபராதி என குறிப்பிட்ட நிலையில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டை திரும்ப அளிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்தில் ஆர்யன் கான் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் ஆர்யன் கானின் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.