அசாமில் மனைவியை ஆசிட் குடிக்கவைத்து துன்புறுத்தி கணவன் மற்றும் குடும்பத்தார் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாமின் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் ரதாபரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பைரப் நகர் பகுதியில் பெண் ஒருவரை அவரது கணவரின் குடும்பத்தார் ஆசிட் குடிக்கவைத்து துன்புறுத்திக் கொலை செய்துள்ளனர். உயிரிழந்தவர் சும்னா பேகம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட கணவர் ஷகீல் அகமதுவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவர் மற்றும் கணவரின் பெற்றோர்கள் வலுக்கட்டாயமாக பெண்ணுக்கு ஆசிட் கொடுத்து குடிக்க வைத்துள்ளனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துவந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் கடந்த சில தினங்களாக மனதளவிலும் உடலளவிலும் பெண்ணை கணவர் மற்றும் அவரின் குடும்பத்தார் துன்புறுத்தி வந்தது தெரிய வந்துள்ளதாகவும் போலீசார் கூறினர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.