மகாராஷ்டிரத்தில் கனமழை பெய்துவருவதால், இரண்டு மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மும்பை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள சிரோஞ்சா நகரில் வெள்ளப்பெருக்கு நிலவி வருவதால், ஏராளமான நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கட்சிரோலி மற்றும் கோந்தியா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிகக் கனமழையும் பெய்யக்கூடும். இந்த 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், அதே நேரத்தில் மாநிலத்தின் பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இதையும் படிக்கலாம்: தமிழகத்தில் 3 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
கட்சிரோலியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளைத் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (என்டிஆர்எஃப்) மேற்கொண்டனர் மற்றும் மக்களுக்கு பல்வேறு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினர்.
மேலும், கனமழை, வெள்ளம் தொடர்பான பல்வேறு சம்பவங்களில் ஜூன் 1 முதல் இதுவரை 102 பேர் உயிரிழந்தனர்.
புணே, சதாரா, சோலாப்பூர், நாசிக், ஜல்கான், அகமதுநகர், பீட், லத்தூர், வாஷிம், யவத்மால், துலே, ஜல்னா, அகோலா, பண்டாரா, புல்தானா, நாக்பூர், நந்துர்பார் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை காரணமாக குறைந்தது 28 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.