‘கோ ஃபா்ஸ்ட்’ விமான நிறுவனத்துக்குச் சொந்தமான 2 விமானங்களில் செவ்வாய்க்கிழமை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அவை அவசரமாகத் தரையிறங்கின.
கோ ஃபா்ஸ்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் மும்பையிலிருந்து லே நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது அதன் 2-ஆவது என்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், அந்த விமானம் உடனடியாக தில்லிக்கு திருப்பிவிடப்பட்டது.
இதேபோல ஸ்ரீநகரிலிருந்து தில்லி நோக்கி வந்த மற்றொரு விமானத்தில், நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு உடனடியாக ஸ்ரீநகா் திரும்பியது. இந்த இரு சம்பவங்கள் குறித்தும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) விசாரணை மேற்கொண்டுள்ளது.
டிஜிசிஏ ஒப்புதல் அளித்த பின்னரே மேற்கண்ட 2 விமானங்களும் பயணத்தை தொடர அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கடந்த ஒரு மாதமாக பல்வேறு இந்திய விமானங்களில் தொழில்நுட்ப ரீதியாக பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே விமான நிறுவன பிரதிநிதிகள், விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகளுடன் கடந்த 3 நாள்களாக ஆலோசனை மேற்கொண்டு வந்த மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பாா்வையிடுமாறு அவா்களுக்கு அறிவுறுத்தினாா்.