நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் பிரச்னைகள் குறித்து விவாதிக்க பாஜக அரசு அச்சப்படவில்லை என்று மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மழைக்கால கூட்டத்தொடர் திங்கள் கிழமை முதல் நடைபெற்று வரும் நிலையில், மூன்றாவது நாளாக இன்று மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடியது.
எனினும் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. வரி, பணவீக்கம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை - மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவை கூடியதும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஜனநாயகத்தின் மீது காங்கிரஸ் கட்சி அழிவு மனப்பான்மையைக் காட்டுகிறது. பணவிலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி அதிகரிப்பு குறித்து விவாதிப்பதற்கு அரசு ஒருபோதும் அச்சம் கொள்ளாது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வந்த பிறகு இந்த பிரச்னைகள் குறித்து விவாதிக்கலாம். அவர் எதிர்க்கட்சிகளின் அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கமளிப்பார்.
அவையை வெற்றிகரமாக நடத்தவிடாமல் தடுப்பதில் காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்படுகிறது. நாடாளுமன்றத்தில் குளறுபடிகளை ஏற்படுத்துவதில் எதிர்க்கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது என விமர்சித்தார்.