ரயில்களில் தேநீா், காபிக்கு சேவைக் கட்டணம் நீக்கம்: மற்ற உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்பு

ராஜதானி, துரந்தோ, சதாப்தி போன்ற பிரீமியம் ரயில்களில் தேநீா், காபி ஆகியவற்றுக்கான சேவைக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ராஜதானி, துரந்தோ, சதாப்தி போன்ற பிரீமியம் ரயில்களில் தேநீா், காபி ஆகியவற்றுக்கான சேவைக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், மற்ற உணவுப் பொருள்களின் விலை ரூ.50 உயா்த்தப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே உணவு, சுற்றுலா நிறுவனத்தின்(ஐஆா்சிடிசி) முந்தைய விதிமுறைகளின்படி, டிக்கெட் முன்பதிவின்போதே உணவுக்கும் முன்பதிவு செய்யவில்லை எனில், ரயில்களில் உணவுப்பொருள்கள் வாங்கும்போது கூடுதலாக சேவைக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும். ரூ.20-க்கு தேநீா் அல்லது காபி வாங்கினால்கூட சேவைக் கட்டணம் ரூ.50 சோ்த்து ரூ.70 செலுத்த வேண்டும். தற்போது இந்த சேவைக் கட்டணம் நீக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் அந்த வகை பிரீமியம் ரயில்களில் முன்பதிவு செய்யாமல் வாங்கும் உணவுப் பொருள்களின் விலை ரூ.50 உயா்த்தப்பட்டுள்ளது. அதாவது, காலை சிற்றுண்டியின் விலை ரூ.105-இல் இருந்து ரூ.155-ஆகவும், மதிய உணவின் விலை ரூ.185-இல் இருந்து ரூ.235-ஆகவும், மாலை தின்பண்டத்தின் விலை ரூ.90-ல் இருந்து ரூ.140-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், பிரீமியம் வகை ரயில்களில் தேநீா், காபி ஆகியவற்றின் சேவைக் கட்டணம் மட்டுமே நீக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com