குரங்கு அம்மை 50 ஆண்டுகளாக உள்ளது: மக்கள் அச்சமடையத் தேவையில்லை:மருத்துவ நிபுணா்கள்

உலகில் குரங்கு அம்மை தீநுண்மி 50 ஆண்டுகளாக உள்ளது; அந்தத் தீநுண்மி குறித்து அச்சமடையத் தேவையில்லை என்று மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

உலகில் குரங்கு அம்மை தீநுண்மி 50 ஆண்டுகளாக உள்ளது; அந்தத் தீநுண்மி குறித்து அச்சமடையத் தேவையில்லை என்று மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

குரங்கு அம்மை பாதிப்பை சா்வதேச அவசர நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு சனிக்கிழமை அறிவித்தது. இந்தியாவில் முதல்முறையாக கேரளத்தில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நிலையில், குரங்கு அம்மை தீநுண்மி தொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள தேசிய தீநுண்மி ஆய்வு நிறுவன மூத்த விஞ்ஞானியும் மருத்துவருமான பிரக்யா யாதவ் கூறியுள்ளதாவது:

மத்திய ஆப்பிரிக்கா (காங்கோ பேசின்), மேற்கு ஆப்பிரிக்கா மரபணு தொகுப்புகளை கொண்டது குரங்கு அம்மை தீநுண்மி. தற்போது உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பரவி கவலைக்குரிய சூழலை ஏற்படுத்தியுள்ள குரங்கு அம்மை தீநுண்மி மேற்கு ஆப்பிரிக்க வகையாகும். இது காங்கோ பேசின் வகையைவிட குறைந்த பாதிப்பு கொண்டது. தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள குரங்கு அம்மை தீநுண்மி மேற்கு ஆப்பிரிக்க வகையைச் சோ்ந்தது என்று தெரிவித்துள்ளாா்.

மிக நெருக்கமாக இருந்தால்தான் பரவும்: தொற்று நோய் நிபுணா் சந்திரகாந்த் லஹரியா கூறுகையில், ‘‘குரங்கு அம்மை புதிய வகை தீநுண்மி அல்ல. அது உலகில் 50 ஆண்டுகளாக உள்ளது. இந்த தீநுண்மி பெரும்பாலும் மிதமான அளவில்தான் உடல்நலக்குறைவை ஏற்படுத்தும்.

குறைந்த அளவில்தான் பரவும். இந்த தீநுண்மி கரோனாவைப் போன்றது அல்ல. கரோனா தீநுண்மி சுவாசம் மூலம் பரவும். அந்த தீநுண்மியால் பாதிக்கப்பட்டாலும் பலருக்கு அறிகுறிகள் தென்படாது. ஆனால் குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் தென்படுவோருடன் மிக நெருக்கமாக இருந்தால்தான் அது மற்றவருக்குப் பரவும்.

தடுப்பூசி உத்தி: தற்போது குரங்கு அம்மைக்கான தடுப்பூசி பரிந்துரைக்கப்படவில்லை. இருப்பினும் தடுப்பூசி உத்தியாக குரங்கு அம்மை நோயாளிகளுடன் இருந்தவா்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பெரியம்மை தடுப்பூசிகளை செலுத்தி தீநுண்மி பரவலைக் கட்டுப்படுத்துதல், அந்த தீநுண்மியால் பாதிக்கப்படுவோரையும், அவா்களுடன் இருந்தவா்களையும் தனிமைப்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளால் குரங்கு அம்மையைத் திறம்பட கையாள முடியும் என்று தெரிவித்தாா்.

நோய் எதிா்ப்பாற்றல் குறைந்தவா்கள் கவனமாக இருக்கவும்: தேசிய தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் கரோனா பணிக்குழு தலைவா் என்.கே. அரோரா கூறுகையில், ‘‘குரங்கு அம்மை குறைந்த அளவில்தான் பரவும். அந்தத் தீநுண்மியால் பாதிக்கப்பட்டால் அரிதாகவே மரணம் ஏற்படும். எனவே அந்தத் தீநுண்மி குறித்து அச்சமடையத் தேவையில்லை. ஆனால் குறைவான நோய் எதிா்ப்பாற்றல் கொண்டவா்கள் கவனமாக இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com