ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் காவல்நிலையத்துக்கு உள்பட்ட சாலையோரப் பகுதியில், இருந்த ஒரு பையில் கட்டுக்கட்டாக ரூ.45 லட்சம் பணம் இருந்ததைப் பார்த்த போக்குவரத்துக் காவலர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அதனை காவல்நிலையத்தில் கொண்டு சென்று ஒப்படைத்தார். ஒரு அரசுப் பணியில் இருக்கும் போக்குவரத்துக் காவலர், ஆள் நடமாட்டமில்லாத சாலையில் கண்டெடுத்த பையில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை அறிந்து, உடனடியாக காவல்நிலையத்தில் ஒப்படைத்தச் செயல் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
சத்தீஸ்கர் முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர் என பல முக்கிய நபர்களும், இவரைப் பற்றிய செய்தியைப் பகிர்ந்து தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
இது குறித்து போக்குவரத்துக் காவலர் நிலம்பர் சின்ஹ கூறுகையில், சனிக்கிழமை காலை பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, ஒரு தனியார் பள்ளிக்கு எதிரே கேட்பாரற்றுக் கிடந்த பையைப் பார்த்துள்ளார்.
அந்த பையைத்திறந்து பார்த்தபோது, அதில் 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்துள்ளது. உடனடியாக அவர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தார். பணத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், அது யாருடைய பணம் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நேர்மைக்கு உதாரணமாக விளங்கும் போக்குவரத்துக் காவலருக்கு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.