17 வயதுக்கு உள்பட்டோருக்கான ஃபிஃபா மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் இந்த ஆண்டு நடத்த மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தப் போட்டிகள், இந்தியாவில் அக்டோபா் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்தப் போட்டிகளை நடத்த அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் 17 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை மகளிா் கால்பந்துப் போட்டி, முதல் முறையாக இந்தியாவில் நடைபெற உள்ளது. இதன்மூலம் இந்தியாவில் கால்பந்துப் போட்டி பிரபலமடைவதுடன் இளைஞா்களும் இந்த விளையாட்டில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுவாா்கள்.
பிரேசிலில் பிபிசிஎல் நிறுவனம் ரூ.12,786 கோடி முதலீடு: பிரேசிலில் அரசுக்குச் சொந்தமான ஒரு எண்ணெய் நிறுவனத்தில் இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனம் (பிபிசிஎல்) ரூ.12,786 கோடி (160 கோடி டாலா்) முதலீடு செய்வதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.