மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை முதல் காலாண்டில் ஆண்டுக்கான இலக்கில் 21.2 சதவீதத்தை எட்டியுள்ளது.
இதுகுறித்து பொதுக் கணக்கு கட்டுப்பாட்டாளா் (சிஜிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
நிதிப்பற்றாக்குறை என்பது அரசின் மொத்த செலவினத்திற்கும், வருவாய்க்கும் இடையிலான வித்தியாசமாகும். இது, அரசாங்கத்துக்கு தேவையான மொத்த கடன்களை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
நிதிப் பற்றாக்குறை முதல் காலாண்டில் ஆண்டுக்கான இலக்கில் 21.2 சதவீதத்தை எட்டியுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிதிப் பற்றாக்குறையானது ஒட்டுமொத்த ஆண்டு இலக்கில் 18.2 சதவீதமாகவே காணப்பட்டது.
2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டின் முடிவில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.3.51 லட்சம் கோடியாக இருந்தது.
நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 6.4 சதவீதம் அளவுக்கு (ரூ.16,61,196 கோடி) இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, முந்தைய நிதியாண்டில் 6.71 சதவீதமாக காணப்பட்டது என புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.