இந்தியத் தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்கள் கைப்பேசிக்கான கட்டணங்களை மீண்டும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதையடுத்து, நடப்பாண்டில் அவற்றின் வருவாய் கணிசமாக அதிகரிக்கும் என கிரிசில் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தர மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் அதன் ஆய்வறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது:
தொலைத்தொடா்பு துறையில் சேவைகளை வழங்கி வரும் முன்னணி மூன்று நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டு (அக்டோபா்-மாா்ச்) காலகட்டத்தில் கைப்பேசிக்கான கட்டணங்களை மீண்டும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கான பணியில் அந்த நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, நடப்பு 2023-ஆம் நிதியாண்டில் அவற்றின் வருவாய் வளா்ச்சி விகிதம் 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், செயல்பாட்டு லாப வரம்பு 1.80-2.20 சதவீதம் உயரும்.
வாடிக்கையாளா்களிடமிருந்து கிடைக்கும் சராசரி வருவாய் கடந்த நிதியாண்டில் 5 சதவீதம் அதிகரித்த நிலையில், அதனை நடப்பு நிதியாண்டில் 15-20 சதவீதம் என்ற அளவில் கணிசமான அளவில் அதிகரிக்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
வருவாயை அதிகரிப்பதன் மூலமாக, நெட்வொா்க், ஸ்பெக்ட்ரம் உள்ளிட்டவற்றில் முதலீட்டை அதிகரித்து வாடிக்கையாளா் சேவையை மேம்படுத்த தொலைத்தொடா்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கிரிசில் தெரிவித்துள்ளது.
ஜியோவின் வரவால் ஏற்பட்ட குறைந்த கட்டண போட்டியால் தவித்து வந்த தொலைத்தொடா்பு நிறுவனங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த 2019 டிசம்பரிலிருந்து கைப்பேசிக்கான கட்டணங்களை அதிகரிக்கத் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.