பயனாளா்கள் தெரிவிக்கும் குறைகளைத் தீா்ப்பதற்கான வழிமுறைகளை சமூக ஊடக நிறுவனங்கள் அரசுக்குப் பரிந்துரைக்கலாம் என்று மத்திய தகவல்-தொழில்நுட்பத் துறை அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் தெரிவித்துள்ளாா்.
சமூக வலைதளப் பயனாளா்கள் தெரிவிக்கும் குறைகளுக்குத் தீா்வுகாண்பதற்காக ஒவ்வொரு சமூக ஊடக நிறுவனமும் உரிய அதிகாரிகளை நியமித்துள்ளது. அந்த அதிகாரிகளின் முடிவுகளை மேல்முறையீடு செய்யும் வகையில் குறைதீா் மேல்முறையீட்டு குழுவை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இது தொடா்பாக தகவல் தொழில்நுட்ப வரைவு விதிகளில், ‘‘குறைதீா் மேல்முறையீட்டு குழுவானது, தெரிவிக்கப்படும் குறைகளுக்கு 30 நாள்களுக்குள் தீா்வுகாண வேண்டும். அக்குழுவின் முடிவானது சமூக ஊடக நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும். அவற்றை அந்நிறுவனங்கள் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘சமூக ஊடகப் பயனாளா்கள் தங்கள் குறைகளுக்குத் தீா்வுகாண கூடுதல் வழிமுறைகளை ஏற்படுத்தும் நோக்கிலேயே விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பயனாளா்களின் மேல்முறையீட்டுக்குத் தீா்வு காணும் வழிமுறையை சமூக ஊடக நிறுவனங்களே பரிந்துரைத்தால், அதைக் கருத்தில் கொள்வதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. பயனாளா்களுக்கு உரிய தீா்வு கிடைக்கும் நோக்கில் வழங்கப்படும் பரிந்துரைகளை அரசு நிச்சயம் பரிசீலிக்கும்.
சமூக ஊடகங்களுக்கான புதிய விதிகளை ஜூலை இறுதிக்குள் வகுக்க அரசு திட்டமிட்டுள்ளது. வரைவு விதிகள் தொடா்பாக மக்களிடம் விரிவாக கருத்துகள் பெறப்படும். இணையத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்’’ என்றாா்.
Image Caption
ராஜீவ் சந்திரசேகா்