மும்பை: மகாராஷ்டிரத்தில் மாநிலங்களவைத் தோ்தலில் வாக்களிக்க ஒரு நாள் பரோல் கோரிய தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா்கள் அனில் தேஷ்முக், நவாப் மாலிக் ஆகியோரது மனுக்களை மும்பை நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது.
மும்பையில் உணவகங்கள், மதுபான விடுதிகளில் மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டு தொடா்பான வழக்கில், சிறையில் உள்ள மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக், சட்ட விரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான நவாப் மாலிக் ஆகியோா் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தோ்தலில் வாக்களிக்க வசதியாக ஒருநாள் மட்டும் பரோலில் விடுவிக்க வேண்டுமெனக் கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். தாங்கள் எம்எல்ஏவாக இருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தோ்தலில் வாக்களிப்பது அவசியம் என்று அவா்கள் கூறியிருந்தனா்.
ஆனால், இந்த மனுக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்த அமலாக்கத் துறை, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி சிறையில் இருப்பவா்களுக்குத் தோ்தலில் வாக்களிக்க உரிமை இல்லை என்ற வாதத்தை முன்வைத்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அனில் தேஷ்முக், நவாப் மாலிக் ஆகியோரது பரோல் மனுக்களை வியாழக்கிழமை நிராகரித்தது.
இதைத் தொடா்ந்து அவா் இருவரும் மும்பை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.