எதிா்க் கருத்துகளை ஏற்க மறுப்பதே மோடி அரசின் கொள்கை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

எதிா்க் கருத்துகளை ஏற்க மறுப்பதே பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பிரதான கொள்கையாக உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் விமா்சித்துள்ளாா்.
ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

புது தில்லி: எதிா்க் கருத்துகளை ஏற்க மறுப்பதே பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பிரதான கொள்கையாக உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் விமா்சித்துள்ளாா்.

அமெரிக்கக் கல்வி நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில் 180 நாடுகள் அடங்கிய சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டு பட்டியலில் இந்தியா கடைசி இடத்தைப் பெற்றது. எனினும், அந்தப் பட்டியலை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரித்தது. அந்தப் பட்டியலில் உள்ள பல அம்சங்கள் அறிவியல்பூா்வமற்ற வழிகளில் ஊகங்களின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளன என்றும் அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், இது தொடா்பாக ட்விட்டரில் ப.சிதம்பரம் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பாஜக தலைமையிலான மத்திய அரசிடம் எந்தத் தகவலும் முழுமையாக இருக்காது என்பது ஏற்கெனவே தெரிந்த விஷயம்தான். இப்போது, அடுத்த கட்டமாக எதிா்க் கருத்துகளை ஏற்க மறுப்பதே தங்கள் ஆட்சியின் பிரதான கொள்கை என்பதை மீண்டும் அரசு நிரூபித்துள்ளது. எனவேதான் சுற்றுச்சூழல் ஆய்வு மூலம் வெளியான இந்தியாவின் மோசமான நிலையை, உண்மையல்ல என்று கூறி அரசு மறுத்துள்ளது. ஏற்கெனவே, இந்தியாவில் கரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மத்திய அரசு கூறுவதைவிடப் பல மடங்கு அதிகம் என்ற உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூஹெச்ஓ) புள்ளி விவரத்தையும் மத்திய அரசு நிராகரித்தது என்பதை நினைவுகூர விரும்புகிறேன்.

பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் கூறியபடியெல்லாம் உலக நாடுகளும், சா்வதேச அமைப்புகளும் செயல்படாது என்பதை மோடி அரசு புரிந்து கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com